Uncategorized

ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் என்னும் தியாகத் திருநாள். ஒவ்வொரும் ஆண்டும் ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் என எதையாவது ஒன்றைப் பலியிட்டு ஆப்ரஹாமின் தியாகத்தை நினைவு கொள்ளும் நாள். ஓ ! இஸ்லாம் பத்தி பேசுறோம்ல.. அப்ப இப்ராஹிம்-னு மாத்திக்கோ.. ஐசாக் என்பதற்கு பதிலாக இஸ்மாயில் என்று மாத்திக்கோ என்ற அசரீரி கேட்டதால்.. ஒவ்வொரு ஆண்டும் இப்ராஹிம் & இஸ்மாயீலின் தியாகத்தை நினைவு கொள்ளவே இந்தப் பண்டிகை.. ஹஜ் எனப்படும் புனிதப் பயணமும் இந்த நாளில்தான்.

எளிமையாகச் சொன்னால் சிவன் பிள்ளைக் கறி கேட்ட கதைதான்.. அரேபியா என்பதால் ஆங்காங்கே சில மாற்றங்கள். இந்தப் பண்டிகையின் மூலத்தைத் தேடிப் போனால் இதன் பின்னே ஒரு சக்களத்திச் சண்டைதான் இருக்கிறது.

யூதர்களும், கிருஸ்துவர்களும் மற்றும் முஹம்மதியர்களும் தங்களை இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றனர். இஸ்லாத்தின் புனித நூலான குர் ஆன் இப்ப்ராஹீமின் பரம்பரை மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது என்று கூறுகிறது.

ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். (குர் ஆன் 3:33)

அப்ப தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் என்ன தக்காளித் தொக்கா என்ற கேள்வி வந்தால் அதை அடக்கிக் கொண்டு மேலே படியுங்கள்..

சரி, யார் இந்த இப்ராஹிம் என்பதிலிருந்து பார்ப்போம்.. தனக்குப் பின்னரே இஸ்லாம் பரவியது என்று சொன்னால் அதில் பெருமை இருக்காது என்று கருதிக் கொண்ட முகமது, அவர் காலத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஆப்ரஹாமிய கதைகளை குர் ஆனிலும் சேர்த்துக் கொண்டு அந்தக் கதை மாந்தர்களையும் இஸ்லாமியராக்கி இஸ்லாமே உலகின் ஆதி மதம் என்று கதை விட்டார். பிற ஆப்ரஹாமிய மதங்களான யூதமும், கிருஸ்துவமும் ஆப்ரஹாமை சிறப்பித்துக் கூறுகின்றன. தாங்கள் மட்டுமே ஆப்ரஹாமின் உண்மையான வழித்தோன்றல்கள், விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்வதில் மூன்று மதங்களும் போட்டியிட்டுக்கொள்கின்றன.

இஸ்லாமும் தன் பங்குக்கு அதே டெய்லர், அதே வாடகை என இப்ராஹிம் என்ற பெயரில் அதே கதைகளைச் சுடச் சுட இறக்கியது.

அல்லாஹ்வின் தூதர்களில் தனிச் சிறப்பு பெற்றவர். இப்ராஹீமை அல்லாஹ்வின் தூதர்களுக்கெல்லாம் தந்தையாக இஸ்லாமிய நம்ம்பிக்கை கருதுகிறது.
தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.” – (குர் ஆன் 2:130)

முகம்துக்கு முன்னர் இஸ்லாம் இருந்தது என்பதற்கும், இப்ராஹிம் என்பவர் இஸ்லாமியர் என்பதற்கும் குர் ஆனைத் தவிர வேற எந்தத் தரவும் இல்லை. ஆனாலும் வேறு வழியில்லை நீங்க நம்பித்தான் ஆகணும் என அசுரன் பசுபதி பாணியில் முகமது சொல்லி விட்டதால் ஆப்ரஹாம் இப்ராஹிம் ஆகிட்டாருப்பா.

இப்ராஹீம் தனது இளம் வயதிலிருந்தே அல்லாஹ்வை பற்றி தனது சமுதாய மக்களிடம் எடுத்துரைத்து வந்திருக்கிறார். ஒருமுறை திருவிழா ஒன்றின் பொழுது, அவரது சமுதாய மக்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த சிலைகளை கோடாரியால் உடைத்து, சிதைத்த பின்னர் அந்தக் கோடாரியை பெரியசிலை தோளில் தொங்கவிட்டு சென்றார் என்றெல்லாம் முகமது சொல்லியிருக்கிறார். மேலும், கோபம் கொண்ட மக்கள் இப்ராஹீமை நெருப்புக் குண்டத்தில் வீசி எரிந்தனர் என்றும் சொல்கிறார்.

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை- அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். – (புகாரி)

இப்ராஹீமின் மீது, பல்லிக்கு என்ன கோபம்? அல்லாஹ், பல்லியைத் விரட்டியடித்து(!), அற்புதம் நிகழ்த்தி அவரைக் காப்பாற்றியதாக குர் ஆன் கதையளக்கிறது.

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். – (குர் ஆன் 21: 68,69)

குர்ஆன் கூறும் இந்த நெருப்புக் குண்டக்கதையை மற்ற ஆப்ரஹாமிய மதங்களான யூதமும், கிருஸ்தவமும் ஆதரிக்கவில்லை. மாறாக இப்படியொரு சம்பவம் ஆப்ரஹாமின் வாழ்வில் நிகழவேயில்லை என்கின்றன.

சரி நாம் பேசு பொருளுக்கு வருவோம்.. இப்பேர்ப்பட்ட இப்ராஹீம் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர் ஆனது எப்பிடி? தியாகத் திருநாள் என்னும் பக்ரீத் பண்டிகைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம்.

தியாகம் என்றவுடன் முஹம்மதியர்களின் நினைவிற்கு வருபவர்கள் இப்ராஹிமும்(Abraham), இஸ்மாயீலுமே. நீங்கள் இணையதளத்தில் தியாகம்(Sacrifice) என்று தேடினால் கிடைக்கும் முடிவுகளில் இவர்களிருவருமே பெரும்பான்மையாக இருப்பார்கள்.

முஹம்மதியர்களின் நம்பிக்கை இப்படி கூறுகிறது :
இன்றைக்கு சற்றேறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரான இப்ராஹிம் தன்னுடைய தள்ளாதவயதிலும்(85) தனது அடிமைப்பெண்(பணிப்பெண்) ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். குழந்தைப்பேறு இல்லாத இப்ராஹிமின் வயதான மனைவி சாராவினால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது சக்களத்தி ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் வெறுக்கிறார் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைக்கிறார். அதற்கேற்றவாறே, ஹாஜிராவையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பாலைவன வெயிலில் விட்டுவிடுமாறு அல்லாஹ்வும் இப்ராஹிமிடம் கட்டளையிடுகிறான்.

ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் சில உணவுப் பொருட்களுடன் அரேபியப் பாலைவனத்தில், ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தன்னந்தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் ஓடிவந்துவிடுகிறார். கைவசமிருந்த உணவும் குடிநீரும் தீர்ந்ததும் பிரச்சனை துவங்குகிறது. தாகத்தாலும் பசியாலும் வீறிட்டு அழும் குழந்தைக்காக உதவிதேடி அங்குமிங்குமாக அலைமோதுகிறார் ஹாஜிரா. நாதியற்றுப்போன தங்களுக்கு உதவிசெய்ய வழிப்போக்கர்கள் யாரேனும் தென்படமாட்டார்களா? என அங்குமிங்குமாக அலைபாய்கிறார். அப்பொழுது ஒரு வானவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. குழந்தை இஸ்மாயீல் காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக் கிளம்பியதாகவும் சொல்லப்படுகிறது. “ஸம் ஸம்” என்று கூறி அந்த நீரை ஹாஜ்ரா தனது கைகளால் அணைகட்டித் தடுக்கிறார். அவர் அவ்வாறு தடுக்கவில்லையெனில் அந்நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியை செழிக்கச் செய்திருக்கும் என்பதும் முஹம்மதியர்களின் ஜதீகம். கிணறாக சுருங்கிய அந்நீரைக் குடித்து பாலைவனத்திலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் இப்ராஹீமையே வந்தடைகின்றனர்,

ஆண்டுகள் பதிமூன்று கடந்ததும் அடுத்த களம் தயாரானது. அல்லாஹ், இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை ( குர் ஆன் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான் இதைக்கேட்ட தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல் தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார் ( குர் ஆன் 11:72,51:29). அல்லாஹ்வின் அற்புதத்தால் மாதவிடாய் அறவே நின்றுபோன மூதாட்டி சாரா, இஸ்ஹாக் என்ற மகனைப் பெற்றெடுக்கிறார். இஸ்மாயீலின் மீதான சாராவின் வெறுப்பு அதிகமாகிறது. (இதற்கு வாரிசுரிமை, இஸ்ஹாக்கிற்கு தாய்பாலை மறக்கச்செய்யும் நிகழ்சியின் பொழுது சாராவை கேலி செய்ததது, இஸ்ஹாக்கை வழிகொடுத்து விடுவாரோ என வருத்தப்பட்டது என்று சில காரணங்களை யூதக்கதைகள் சொல்கிறது)

இம்முறை அல்லாஹ் கடுமையான உத்தரவை வெளியிடுகிறான். இஸ்மாயீலை அறுத்து தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கனவில் கட்டளை பிறப்பிக்கிறான். முதலில் கனவை அலட்சியம் செய்தவர், அல்லாஹ்வின் வற்புறுத்தல் தாங்க முடியால் பதிமூன்று வயதான மகன் இஸ்மாயீலை நரபலி கொடுப்பதென்று முடிவு செய்கிறார். அதற்கென ஒரு நாளைக் குறித்து யாருமற்ற ஓரிடத்தில் மகனை நரபலியிட மகனை அழைத்தச் செல்கையில் இப்ராஹிமின் நரபலியை தடைசெய்ய முயன்ற சைத்தானை கல்லெறிந்து விரட்டுகிறார். மகனின் ஆலோசனைக்கேற்ப முகம் குப்புறக்கிடத்திய நிலையில் வைத்தவாறு மகனை அறுத்து பலியிட முயற்சிக்கிறார். பாறையையே இரண்டாக பிளக்கும் வாளால் சிறுவனின் கழுத்தை அறுக்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கையில், நரபலி சோதனை முடியுற்றதாகக்கூறி ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இப்ராஹிமின் இந்நரபலி முயற்சி “அல்லாஹ்வின் நண்பர்” என்ற தகுதியை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதன் நினைவாகத்தான் “பக்ரீத்” – ஆட்டுத் திருநாள் – தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள். இப்ராஹீமின் நரபலி முயற்சியைத்தான் மாபெரும் தியாகமாக இஸ்லாம் போற்றுகிறது. முஹம்மதியர்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் சடங்குகளும் இதைத்தான் நினைவுகூர்கிறது.

இதில் முஹம்மதியர்கள், இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் இஸ்ஹாக்கை அல்ல என்று கூறி பழைய ஏற்பாட்டுக்காரர்களுடன் மோதலுக்கும் நிற்கிறார்கள். யூதர்கள் இஸ்ஹாக்கின் வழித்தோன்றல்களாகவும் இஸ்மாயீல் அரேபியர்களின் தந்தையாகவும் அறியப்படுகின்றனர். யார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான வாரிசு? என்பதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பங்காளிச் சண்டையின் அடிப்படை.

இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது யாரை? யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முஹம்மது கூறினாரா?

குர்ஆன், இஸ்மாயீலைத் தூதரென்றும் நல்லடியரென்றும் கஅபா புணரமைப்புப் பணியில் ( குர்ஆன் 2:127) ஈடுபட்டதாக பெயரைக் குறிப்பிட்டு கூறுகிறது. எனவே நபர்களின் பெயரைக் குறிப்பிடுவதில் குர்ஆனுக்கு எவ்வித தயக்கமுமில்லையென்பது தெளிவாகிறது.

ஆனால், மிக முக்கியமான, சர்ச்சைக்குறிய நரபலி நிகழ்ச்சியை (கு 37:100-108) மகனின் பெயர் குறிப்பிடப்பிடாமல் கூறுகிறது. முஹம்மதிய அறிஞர்கள், குர்ஆன் 37:10-108 வசனங்களில், வழக்கம்போல அடைப்புக்குறிகளுக்குள் இஸ்மாயீலை நுழைத்து தாங்கள் விரும்பியவாறு பொருள் விளங்கச் செய்துவிட்டனர். ஆனால் குர்ஆன் 37:101,112&113 வசனங்களை அவர்கள் சரிவர கவனிக்க(!) மறந்தது விட்டனர்.

அல்லாஹ்வால் நன்மாராயம் கூறப்பட்ட மகனையே நரபலி சோதனைக்கு உட்படுத்தியதாகக் குர்ஆன் 37:101 கூறுகிறது. குர்ஆனின் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28 வசனங்கள், இஸ்ஹாக்கை, அல்லாஹ்வால் நற்செய்தியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட மகனென்று உறுதி செய்கிறது.

நரபலி சோதனையில் வெற்றியடைந்த இப்ராஹிமிற்கு வாழ்த்துக்களைக் கூறுகையில்( குர்ஆன் 37:108-111) இஸ்ஹாக்கை தனது தூதராக தேர்வுசெய்த நற்செய்தியை இப்ராஹிமிற்கு தெரிவித்ததாக குர்ஆன் 37:112 கூறுகிறது. முஹம்மதியர்கள் கூறுவதைப் போல நரபலி ( குர்ஆன் 37:100-108) முயற்சிக்குள்ளானவர் இஸ்மாயீலாக இருப்பின், தன்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் தந்தையாருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக தன்னை முகம் குப்புறகிடத்தியவாறு அறுக்க வேண்டுமென்றெல்லாம் ஆலோசனை கூறி, மயிரிழையில் உயிர் பிழைத்தவரை அடியோடு மறந்து விட்டு, இவ்விடத்தில், இஸ்ஹாக்கை நபியாக தேர்ந்தெடுத்ததைக்கூறி வாழ்த்த வேண்டிய அவசியமில்லையே?

யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிராக இஸ்மாயீலை முன்நிறுத்துவது முஹம்மதின் நோக்கமாக இருந்திருக்குமானால் பெயரைக் குறிப்பிட்டு உறுதியாக கூறியிருப்பார். உதாரணத்திற்கு, கிருஸ்துவத்தின், இயேசு இறைமகன் என்ற வாதத்தை மறுப்பதற்காக, இயேசுவைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் “மரியமின் மகன் ஈசா” என்று அவரது தாயின் பெயருடனே குறிப்பிட்டு தனது வாதத்தை வலியுறுத்துகிறார். கிருஸ்த்துவத்ததின் அடிப்படையான இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முஹம்மது வன்மையாகவே மறுக்கிறார். எனவே, நரபலி நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் முஹம்மது கூறியதை பின்னுள்ளவர்கள் திரித்துவிட்டனர் எனலாம்.

மேலும், இப்ராஹிம், தனது அடிமைப்பெண் ஹாஜிராவையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு சென்ற பிறகு நீண்டகாலத்திற்குப் பின்னரே இஸ்மாயீலைத் தேடிவந்ததாக புகாரி ஹதீஸ் கூறுகிறது.

புகாரி 3364 -ல் இருந்து,
…. அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார்/ இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று/ நாஙகள் உஙகளிடம் தஙகிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க/ அவர்கள்/ ஆம் (அனுமதியளிக்கிறேன்)/ ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு/ அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்… என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே/ அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப/ அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள்/ தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே/ இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்/ எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்…

எனவே, இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் என்பது வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில்தான். அதற்கு சரியான தரவுகள் எதுவும் இல்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பிறந்த குழந்தையை எந்தப் பாதுகாப்பும் இன்றி பாலைவனத்தில் தாயுடன் விட்டுச் சென்ற ஒருவர் அந்தக் குழந்தை மணமான பிறகு வந்து, அல்லாஹ் சொல்லிட்டாரு உன்னை பலியிட வேண்டும் என்றால் என்ன சொல்லுவான்? ஆனால் இஸ்மாயில் மறு பேச்சு பேசாமல் தலையை வெட்டக் கொடுக்க வந்ததாக குர்ஆன் சொல்கிறது.

குர்ஆனின் மற்ற வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் மூல கதையான ஆப்ரஹாம் & ஐசாக் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது இஸ்மாயில் என்ற பாத்திரம் சரி வர பொருந்தாது.

எது எப்பிடியோ, ஆண்டுதோறும் நீங்கள் சாப்பிடும் பிரியாணிக்குப் பின்னே இருப்பது இந்தச் சண்டைதான்..அன்பு செய்வோம் !! .. மட்டன் பிரியாணி சாப்பிடுவோம் !!

One thought on “ஒரு சக்களத்திச் சண்டையும் பின்னே ஒரு குர்பானியும்..

  1. எது எப்படியோ அந்த கடைசி நான்கு வரிகள் ‘நச்’
    //எது எப்பிடியோ, ஆண்டுதோறும் நீங்கள் சாப்பிடும் பிரியாணிக்குப் பின்னே இருப்பது இந்தச் சண்டைதான்..அன்பு செய்வோம் !! .. மட்டன் பிரியாணி சாப்பிடுவோம் !!//

    Like

Leave a comment